Translate

புதன், டிசம்பர் 28, 2011


எஸ். வையாபுரிப் பிள்ளை (1891 - 1956) (

Prof. Vaiyapuri Pillai

)
தமிழ் ஆராய்ச்சித் துறையில் தனியிடம் பெற்று விளங்கும் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, தமிழிலும் சைவத்திலும் ஆழ்ந்த பயிற்சியுடையவர். சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின் தமிழ்த்தொண்டு ஆற்றப் புகுந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஆராய்ச்சி நூல்கள் பலவற்றை இவரியற்றியுள்ளார். சென்னைப் பல்களைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று, அதைச் சிறந்த முறையில் பதிப்பித்தவர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் 1891ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி சரவணப்பெருமாள் - பாப்பம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்த வையாபுரிப்பிள்ளை, பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று "சேதுபதி தங்க மெடல் (பதக்கம்)" பெற்ற பெருமைக்குரியவரும் அவரே.
தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்கறிஞரானது மட்டுமல்ல, ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார் அவர். பிறகு மூன்று ஆண்டுகள் வையாபுரிப் பிள்ளை திருநெல்வேலியிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார். வையாபுரிப் பிள்ளையின் நெல்லை வாழ்க்கையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக, "இரசிகமணி" டி.கே. சிதம்பரநாத முதலியார், நீலகண்ட சாஸ்திரியார், பேராசிரியர் சாரநாதன், பெ. அப்புசாமி போன்றோர் இருந்திருக்கிறார்கள்.
வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதிப் பிரசுரமான பல கட்டுரைகளும், இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன. உ.வே.சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு.
1926 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியில் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார் வையாபுரிப்பிள்ளை. 1936 ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். 1946 வரை அப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார். வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் பொற்காலம் என்று கூறுவார்கள். சுமார் நான்கு ஆண்டுகள் அப்பதவியில் வையாபுரிப் பிள்ளை இருந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி லெக்சிகன் (சொற்களஞ்சியம்) பதிப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினாரகவும் பணியாற்றிய பெருமை வையாபுரிப் பிள்ளைக்கு உண்டு. இந்தக் காலகட்டத்தில் தான், பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக விளங்கிய வ. ஐ. சுப்பிரமணியம், ஆய்வு மாணவராக வையாபுரிப் பிள்ளையிடம் பணியாற்றி அவரது வாரிசு என்கிற பெயரையும் பெற்றார்.
இரா. பி. சேதுப்பிள்ளையைப் போலவே கம்பனின் கவிநயத்தில் தன்னைப் பறிகொடுத்த வையாபுரிப் பிள்ளை, "இரசிகமணி" டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி ஆகிய இருவரிடமும் வையாபுரிப் பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது. தனது சிறைவாசத்துக்குப் பிறகு, அரசியல் வாழ்வில் வெறுப்புற்றிருந்த வ.உ.சிதம்பரனார், ஏட்டிலிருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்தார். அதனை எஸ்.வி.பி.யிடம் காட்டி செப்பம் செய்தார். எஸ்.வி.பியையும் அதன் பதிப்பாசிரியராகத் தன்னுடன் இருக்குமாறு கேட்டதையும், ஆனால் எஸ்.வி.பியோ நீங்களே பதிப்பாசிரியராக இருந்தால் போதும் என்று மறுத்து விட்டதாகவும் அந்த உரைப் பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி. நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார். அவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மனி, மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில். அவை அனைத்தையும் கல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை. நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். "மனோன்மணியம்" உரையுடன் தொடங்கிய அவர் 1955 இல் திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்துத் தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார். கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவரது அவா மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது.
துயிலுணர்ந்தவுடன் நீராடுதல், இக்காலத்து, கிராமாந்தரங்கள் போலவே, பண்டைக்காலத்தும் வழக்கமாக இருந்தது. மணிலினால் செய்த பாவைக்குப் பூக்களை அணிந்து, நீராடுகின்ற பெண்களோடு தானும் கைகோத்து, அவர்கள் சேர்ந்துநின்ற இடத்தே தானும் சேர்ந்துநின்று, அசைந்துநின்ற இடத்தே தானும் அசைந்து நின்று, கபடமற்ற மனத்தராகிய அப்பெண்களின் கூட்டத்தோடு நீர்த்துறையிலே (நீரோடு நெருங்கித்) தாழ்ந்துள்ள மருதமரக்கிளைகளில் ஏறி, கரையில் உள்ளவர் திகைக்க, தண்ணீர் சிதர்ந்து பரவ, ஆழ்ந்த குளத்திலே ஒருவன் " துடும்" எனப்பாய்ந்து குளித்த செய்தி ஒன்று புறநானூற்றிலே (243) அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தெழுந்த பாவை நோன்பு அதிகாலையில் நிகழ்ந்த இந்நீராட்டினை அடிப்படையாகக் கொண்டதே.
- வையாபுரிப் பிள்ளையின் (தமிழர் பண்பாடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக