Translate

புதன், ஆகஸ்ட் 22, 2012

பி.இ. படிப்பைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கான டிப்ஸ்...

     சென்னை, ஆக.22: பி.இ. கலந்தாய்வின் மூலம் 1.27 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துவிட்டனர். இந்த மாணவர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரிகளுக்குச் செல்லும் அவர்களிடம் குழப்பங்களும், சந்தேகங்களும் இருக்கும்.இந்த மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக ராமானுஜன் கம்ப்யூட்டர் மையத்தின் இயக்குநரும், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையின் செயலாளருமான வி.ரைமண்ட் உத்தரியராஜ் வழங்கும் ஆலோசனைகள்:கல்லூரி மற்றும் படிப்பைத் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு அதுதொடர்பாக மாணவர்களுக்கு எந்தவிதமான குழப்பமும் இருக்கக் கூடாது. தங்களின் தேர்வே சிறந்தது என்று கருத வேண்டும். பள்ளியில் பாடங்களைப் படிப்பதற்கும், கல்லூரியில் பொறியியல் பாடங்களைப் படிப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. பொறியியலில் அடிப்படை பாடங்களை கவனத்துடன் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.பள்ளிகளில் இருந்து கல்லூரிகளுக்குச் செல்லும் மாற்றம் வளர் இளம் பருவ வாழ்க்கையில் மிக முக்கியமானது. புதிய சூழல், சற்று கடினமான பாடத்திட்டம், புதிய நண்பர்கள் போன்ற காரணங்களால் மாணவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளலாம். இதுபோன்ற நேரங்களில் பெற்றோருடனோ, குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடனோ தங்களது பிரச்னைகளை மாணவர்கள் மனம் விட்டுப் பேச வேண்டும். அவர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும்.பெரும்பாலான மாணவர்களுக்கு விடுதி வாழ்க்கை புதிய அனுபவமாக இருக்கும். படிப்பிலிருந்து கவனம் சிதறக் கூடாது. அவ்வாறு சிதறும் தருணங்களில் குறிக்கோளை எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். செல்போன், பேஸ்புக் ஆகியவற்றில் அதிக நேரம் செலவிடக் கூடாது. அவற்றை நமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. கல்லூரிப் பாடங்களைப் பொருத்தவரை தள்ளிப் போடுதல் என்பதே கூடாது. ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டுச் செலவிட வேண்டும்.

                                                                               Courtesy-Dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக